

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்து மதத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவருக்கு ‘கல்மா’ எனப்படும் இஸ்லாமிய நடைமுறை சார்ந்த வாசகங்களை படிக்குமாறு வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவரின் அத்தையான சுப்ரியா, இது தொடர்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, மத சம்பந்தமான பாடத்தை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டும் என்று அவர்கள் பதிலளித்ததாக சுப்ரியா கூறியுள்ளார். அந்த மாணவரின் வகுப்பில் மொத்தம் 25 பேர் படித்து வரும் நிலையில், ஒருவர் மட்டுமே இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி பந்தி சஞ்சய் குமார் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டு, கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதை தொடர்ந்து, மாணவருக்கு இஸ்லாம் சார்ந்த வீட்டுப்பாடம் கொடுத்த பெண் ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. இதனிடையே, மாணவரின் அத்தை சுப்ரியா அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மத்திய இணை மந்திரி சஞ்சய் குமார் கூறுகையில், “தங்களை மதசார்பற்றவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள் இந்த சம்பவம் குறித்து ஏன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை? தெலுங்கானாவில் 2028 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதன் பிறகு அனைத்து இந்து மாணவர்களும் நெற்றியில் திலகம்(மத அடையாளம்) வைத்துக் கொள்வது கட்டாயமாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.