19 வயது வாலிபரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு

19 வயது வாலிபரை திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சவுமியா (வயது 19). இவரும், அதே கிராமத்தை சேர்நத 19 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி மாகடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சவுமியாவும், அந்த வாலிபரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்பு குதூரில் அந்த தம்பதி வசித்து வருகின்றனர். இதற்கிடையில், அந்த வாலிபருக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பதாக கூறி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே குதூருக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஆண்களின் திருமண வயது 21 என்பதை மீறி, அந்த வாலிபருக்கு 19 வயதில் குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் சவுமியா மீது குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சிறுமிகளுக்கு தான் இதுபோன்ற குழந்தை திருமணம் நடப்பது வழக்கம். ஆனால் 19 வயது வாலிபருக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பதாக வழக்குப்பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






