

புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் நடவடிக்கை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகளை தொடுத்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார்.
அப்போது நீதிபதிகள், இதில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் தரப்பு வாதத்தை கேட்டு விட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில், போலீஸ் நடவடிக்கை குறித்து விசாரிக்க குழு அமைப்பார்கள் என கூறினர். மேலும் இந்த விவகாரத்தில் முதலில் ஐகோர்ட்டுகளை நாடுமாறும் அறிவுறுத்தினர்.