கர்நாடகாவில் 22-ந்தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு - சித்தராமையா அறிவிப்பு

கணக்கெடுப்பை முடித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 22-ந்தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு - சித்தராமையா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில மந்திரிசபை கடந்த ஜூன் மாதம், 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பை ரத்து செய்து புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் அறிவுறுத்தல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எனப்படும் மாநிலத்தின் சமூக மற்றும் கல்வி கணக்கெடுப்பு வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 7-ந்தேதி வரை நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பு அறிவியல் ரீதியாக நடத்தப்படும். 60 கேள்விகள் கொண்ட கேள்வித்தாள் தயாரிக்கப்படும்.

7 கோடி மக்களின் சமூக மற்றும் கல்வி நிலையை அறிய, கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் மதுசூதன் நாயக் தலைமையில் புதிய கணக்கெடுப்பு நடத்தப்படும். கணக்கெடுப்பை முடித்து விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கையை டிசம்பர் மாதத்துக்கு முன்பு சமர்ப்பிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தசரா விடுமுறை நாட்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள். 1 லட்சம் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் 20 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும். இதற்கு மட்டுமே 325 கோடி ஆகும். ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்புக்கு 420 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com