காவிரி வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் வாதம் நிறைவுற்றது.
காவிரி வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் வாதம் நிறைவு
Published on

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை கடந்த 11ந் தேதி தொடங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று 7வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

இதுவரை கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், எஸ்.எஸ்.ஜாவளி, மோகன் கர்த்தார்க்கி, ஷியாம் திவான் ஆகியோர் வாதாடி வருகின்றனர்.

நேற்று கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ஷியாம் திவான் வாதாடினார்.

கர்நாடகாவுக்கு வாதங்களை முன்வைக்க இன்று (புதன்கிழமை) 1 மணி நேரம் அளிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதன் படி இன்றைய விசாரணையில் கர்நாடக தரப்பில் இன்று ஒரு மணி நேரம் வாதிடபட்டது.

அப்போது கர்நாடக தரப்பில் வக்கீல் கூறும் போது:-

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 192 டிஎம்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நீர் தேவையை விட கூடுதலாக 90 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. பாசன பகுதிகளை தாண்டி 14TMC தண்ணீரை தமிழக அரசு உபயோகிக்கிறது; நடுவர் மன்ற தீர்ப்பின் படி பாசன பகுதிகளை தாண்டி உபயோகிக்கக் கூடாது.கர்நாடகாவின் நீர் தேவையையும், வறட்சியையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் . என கூறினார்.

காவிரி வழக்கு வாரத்தில் 3 நாட்கள் (செவ்வாய், புதன், வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. நேற்றோடு கர்நாடகா 7 நாட்களாக வாதங்களை முன்வைத்துள்ளது. இறுதி விசாரணை நடக்கும் மொத்தம் 15 நாட்களில் 6 நாட்கள் கர்நாடகாவுக்கும், 6 நாட்கள் தமிழ்நாட்டுக்கும், மீதி 3 நாட்கள் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் துவக்கத்தில் ஒதுக்கப்பட்டது. தற்போது கர்நாடகா ஒரு நாள் கூடுதலாக எடுத்துக் கொண்டுள்ளது. இன்றுடன் கர்நாடக அரசின் வாதம் நிறைவுற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com