

புதுடெல்லி,
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது
ஆனால்காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் அதிமுக அரசு எடுக்கவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதற்கும் தயாராக உள்ளதாக அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் அதிரடியாக பேசினார்.
இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் 3 பேரும் எம்.எல்.ஏ ஒருவரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கூறினர்.
இந்த நிலையில் டெல்லியில் பேட்டி அளித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன் காவிரி விவகாரத்தில்,ராஜினாமா செய்யப் போவதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்; நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளேன் -
காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன் . விவசாயிகள் பிரச்னையில் அரசியல் செய்ய வேண்டாம் என கூறிவந்தேன்.
காவிரி விவகாரத்தில் அனைத்து எம்.பிக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சி தலைமையிடம் வலியுறுத்துவேன்.
கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. பிரதமர் மோடி சட்டையை பிடித்தா கேட்க முடியும்?
காவிரி விவகாரத்திற்காக, நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதில் இருந்தே போராடினோம். சட்டத்தை இயற்றும் இடத்தில் உள்ல நாங்களே நாடாளு மன்றத்தை முடக்கினோம்.மக்களுக்கும், மாநிலத்திற்கும் சேவை செய்யவே எம்.பி. பதவி. ராஜினாமா எனது தனிப்பட்ட கருத்து, மக்களுக்காக நான் ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.