காவிரி அமைப்புக்கு வாரியம் என பெயரிட சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

காவிரி விவகாரத்தில் அமைப்பின் த்லைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. #CauveryIssue
காவிரி அமைப்புக்கு வாரியம் என பெயரிட சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டில் வரைவு செயல்திட்டத்துடன் ஆஜராகி இருந்தார். விசாரணை தொடங்கியதும் மத்திய நீர்வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் கோர்ட்டு உத்தரவின் படி வரைவு செயல்திட்டத்தை மூடி சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் இதற்கு மத்திய மந்திரிசபையின் ஒப்புதலை பெற வேண்டி இருக்கும் என்று கூறினார்.

பிப்ரவரி 16-ந் தேதி இந்த கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த வரைவு செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தங்கள் கருத்தை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகள் புதன்கிழமைக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அன்று இந்த வரைவு செயல்திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவது பற்றி முடிவு செய்யப்படும் என்றும் கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

காவிரி வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. வரைவு செயல் திட்டம் தொடர்பாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்தன.

காவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் இருக்க வேண்டும் என தமிழக அரசு வாதம் செய்தது.

காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது.

கர்நாடகாவில் நிலையான அரசு இல்லாததால், வழக்கை ஜூலைக்கு ஒத்திவைக்க கர்நாடகா கோரிக்கை வைத்தது.

காவிரி அமைப்புக்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிட தமிழகம் கோரிக்கை வைத்தது. இதற்கு கர்நாடக மாநிலம் ஒப்புதல் தெரிவித்து உள்ளது. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும் வாரியம் என பெயரிட ஒப்புதல் அளித்தது.

காவிரி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்கு மத்திய அரசு நாளை பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் நாளைக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com