

புதுடெல்லி,
நாட்டில் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி விட்டு அவற்றை முறையாக திருப்பி செலுத்துவதற்கு பதிலாக சிலர் வெளிநாட்டிற்கு தப்பியோடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன.
இதனை அடுத்து அவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை சார்பில் வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வங்கிகளில் கடன் வாங்கி விட்டு முறையாக திருப்பி செலுத்த தவறியவர்களின் மீது சொத்துகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவர்களில் கிங் பிஷர் விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷி உள்ளிட்டோரும் அடங்குவர்.
இவர்கள் மீதும் வழக்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்களை நாடு கடத்தவும் இந்தியா சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
இந்த வங்கி முறைகேடு சம்பவங்களில் வங்கி அதிகாரிகளே உடந்தையாக செயல்பட்டு உள்ளனர் என கூறி சில வங்கிகள் சார்பில் சி.பி.ஐ. அமைப்பிடம் புகார் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் வங்கி முறைகேடு சம்பவங்களில் தொடர்புடைய வழக்குகளில் ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், பஞ்சாப், தமிழகம், தெலுங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி, டெல்லி மற்றும் சண்டிகர் உள்ளிட்ட 169 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தி வருகிறது.
ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் வங்கி மோசடிகளில் ஈடுபட்ட 35 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.