பணி இடமாற்றத்தை எதிர்த்து சி.பி.ஐ. அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

பணி இடமாற்றத்தை எதிர்த்து சி.பி.ஐ. அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பணி இடமாற்றத்தை எதிர்த்து சி.பி.ஐ. அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Published on

புதுடெல்லி,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் லஞ்ச புகார் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இந்த புகார் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில் ராகேஷ் அஸ்தானா ஊழல் வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. விசாரணை அதிகாரி ஏ.கே.பாசி அந்தமான் நிகோபார் தீவுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னுடைய பணி இடமாற்றம் சட்ட விரோதமானது. எனவே இந்த வழக்கை அவசர மனுவாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே ராகேஷ் அஸ்தானா மீது புகார் தெரிவித்த ஐதராபாத்தை சேர்ந்த சதீஷ் சனா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதால், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சி.பி.ஐ. தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தன்னுடைய விளக்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சதீஷ் சனாவுக்கு ஐதராபாத் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டனர். எனினும் மற்ற 2 கோரிக்கைகளை நிராகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com