

ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் இன்று காலை முதல் 22 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. சோதனை நடைபெற்று வரும் இடங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் இல்லமும் அடங்கும். சட்ட விரோதமாக துப்பாக்கி உரிமங்களை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது இல்லத்திலும் சிபிஐ சோதனை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சோதனை நடைபெற்று வரும் ஐஏஏஸ் அதிகாரியான ஷாகித் இக்பால் சவுத்ரி, பழங்குடியின விவகாரங்களுக்கான துறையின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, கதுவா, ரேசாய், ராஜோரி மற்றும் உதாம்பூர் மாவட்டங்களில் துணை ஆணையராக பணியாற்றினார். அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி உரிமங்களை போலி பெயர்களில் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.