

புதுடெல்லி,
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய போது ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது, மத்திய அரசும் அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. லஞ்சப் புகாரின்பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்தது. முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் தேவேந்தர் குமாரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. காவல் முடியும் நிலையில், அவருடைய தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. என்னை கைது செய்தது சட்டவிரோதமானது, என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கிடையே தேவேந்தர் குமாருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை, மாறாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடுமையான நிபந்தனைகளுடன் தேவேந்திர குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.