ரெயில்வே ஓட்டல் மோசடி: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்

ரெயில்வே ஓட்டல் மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்விக்கு மீண்டும் சிபிஐ சம்மன் வழங்கி உள்ளது.
ரெயில்வே ஓட்டல் மோசடி: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ சம்மன்
Published on

பாட்னா,

பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேக்கு சொந்தமாக புரி மற்றும் ராஞ்சியில் இருந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதாவது இந்திய ரெயில்வே மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.) கட்டுப்பாட்டில் இருந்த இந்த 2 ஓட்டல்களின் நிர்வாக உரிமை சுஜாதா ஓட்டல் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கான டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தெரிகிறது. இந்த குத்தகையை பெறுவதற்காக மேற்கு பாட்னாவில் 3 ஏக்கர் நிலத்தை இந்த நிறுவனம், டிலைட் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிறுவனத்துக்கு மிகவும் குறைந்த விலைக்கு வழங்கியது. லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு தெரிந்த இந்த டிலைட் நிறுவனம், பின்னர் அந்த நிலத்தை லாலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லாரா புராஜக்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையே நடந்த இந்த கைமாற்றத்தின் போதும் மிகக்குறைந்த விலைக்கே நிலம் விற்கப்பட்டு உள்ளது.

ரூ.32 கோடி மதிப்புடைய இந்த நிலம் வெறும் ரூ.65 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவிக்கு சொந்தமான 12 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிபிஐ ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் சம்மன் அனுப்பியது. இப்போது மீண்டும் சிபிஐ அவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

வரும் திங்கள் அன்று லாலுவும், மறுநாள் தேஜஸ்வியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் விடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com