சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - வெளியான முக்கிய அறிவிப்பு

45 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வுகளை எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி,
மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று அழைக்கப்படும் சிபிஎஸ்இ நிர்வாகத்தின்கீழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்ற முக்கிய அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம், தேதி வாரியாக தேர்வுகள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2026ம் ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை உலகம் முழுவதும் 45 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.






