

புதுடெல்லி,
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணிதம், 12-ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தேர்வுகள் மீண்டும் நடத்தும் அறிவிப்பைக் கேட்டு மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். வினாத்தாள் வெளியானது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி உள்பட இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாணவர்கள் உள்பட 25 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
28 மாணவர்கள், 5 டியூசன் ஆசிரியர்கள் உள்பட 25 பேரிடம் விசாரித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் எஸ்.பி. ஆர்பி உபாத்யாய் பேசுகையில், இந்தியா முழுவதும் வினாத்தாள் கசிவு தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு தகவலும் கிடையாது, அத்தகைய ஒரு விஷயம் வெளிப்பட்டால், நாங்கள் டெல்லிக்கு வெளியேவும் விசாரணை குழுக்களை அனுப்புவோம். வினாத்தாளின் நகல் வெளியானது எப்படி என்பது தொடர்பாக விசாரிக்கிறோம், மற்றும் வினாத்தாள்கள் எப்படி வெளியே சென்றது, பயனாளர்களை அடைந்தது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்.
இதுவரையில் 25 பேரிடம் விசாரணையை முன்னெடுத்து உள்ளோம். இரு வினாத்தாள்களும் தேர்வுக்கு முன்னதாகவே கிடைத்து உள்ளது. 18 மாணவர்கள், 5 டியூசன் ஆசிரியர்கள் மற்றும் இருவரிடம் விசாரித்து வருகிறோம், என்று கூறிஉள்ளார். சிபிஎஸ்இ தரப்பில் புகாரில் தெரிவிக்கப்பட்ட புகாரில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் கொடுக்கப்பட்டு உள்ளது. வினாத்தாள் வெளியானதை அடுத்து மறுதேர்வு அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தரப்பில் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது.