

புதுடெல்லி,
மத்திய அரசு கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதில் கடந்த 26-ந்தேதி நடந்த 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 28-ந்தேதி நடந்த 10-ம் வகுப்பு கணிததேர்வு ஆகியவற்றின் வினாத்தாள் டெல்லி உள்பட வட மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
வினாத்தாள் வெளியான இந்த இரு பாடங்களுக்கும் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்தது. அதன்படி 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறுதேர்வு வருகிற ஏப்ரல் 25-ந்தேதி நடக்கிறது.
10-ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் டெல்லி மற்றும் அரியானாவில் மட்டுமே அவுட் ஆனதால் அந்த இரு மாநிலங்களில் மட்டுமே மறுதேர்வு நடைபெறும். இதுபற்றி இன்னும் 15 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், மறுதேர்வு நடத்தும் முடிவை சிபிஎஸ்இ நிர்வாகம் கைவிட்டுள்ளது. மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு கணித தேர்வு மீண்டும் நடத்தப்படாது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
வினாத்தாள் கசிந்தாலும், விடைத்தாளில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சிபிஎஸ்இ விசாரணையில் கண்டறிந்ததால், மறு தேர்வு நடத்தும் முடிவை சிபிஎஸ்இ கைவிட்டதாக கூறப்படுகிறது.