

புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் உருவாக்கிய கோவிஷீல்ட் ஆகிய 2 தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டிற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சூழலில் கொரோனா வைரஸ்க்கு எதிராக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட, ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை அங்கீகரிப்பதற்கான செயல்முறைகளை விரைவுபடுத்தியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கோவிட் பணிக்குழு தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான பைசர், இந்தியாவில் தனது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக கடந்த வாரம் தெரிவித்தது. இந்த தடுப்பூசியை பைசர், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் உடன் இணைந்து உருவாக்கியது. இது தொற்றுநோயைத் தடுப்பதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான செயல்திறனைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது.