

வீட்டை உளவு பார்த்தனர்
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு கடந்த மாதம் சொகுசு கப்பல் போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன், ஆர்யன் கானை கைது செய்தது. அப்போது முதல் மாநில மந்திரி நவாப் மாலிக் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக பணம் பறிக்கும் நோக்கத்துடன் மட்டும் தான் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
இந்தநிலையில் அவர் மத்திய விசாரணை முகமை மீது குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது:-
எனது வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உளவு பார்க்கப்படுவதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. நான் கடந்த வாரம் துபாயில் இருந்த போது 2 பேர் கேமராவுடன் எனது வீட்டை உளவு பார்க்க முயற்சி செய்து உள்ளனர். அவர்கள் எனது வீடு, பள்ளிகள், அலுவலகம், பேரக்குழந்தைகள் பற்றி தகவல் சேகரிக்க முயன்று உள்ளனர். சிலர் அவர்களை பிடித்து கேள்வி கேட்டவுடன் தப்பி சென்று உள்ளனர். இதேபோல வந்தவர்களில் ஒருவர் என்னை பற்றி சமூகவலைதளத்தில் தவறாகவும் எழுதி உள்ளார்.
பொய் வழக்கு
சில மத்திய முகமை அதிகாரிகள் எனக்கு எதிரான புகாரை இ-மெயில் மூலம் அனுப்ப தயார் செய்து உள்ளனர். அதுகுறித்த வாட்ஸ்அப் உரையாடல் என்னிடம் உள்ளது. ஒரு மந்திரிக்கு எதிராக மத்திய முகமை பொய் வழக்கு போட திட்டம் போட்டால் அது மிகவும் தீவிரமான விஷயம். அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி, மும்பை போலீஸ் ஹேமந்த் நக்ராலேவிடம் புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.