

புதுடெல்லி,
அமெரிக்காவில் போலி பல்கலைக்கழகம் ஒன்றில் பதிவு செய்து கொண்டு தங்கி இருந்த வெளிநாட்டினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையோர் இந்தியர்கள். இது அங்கு வாழ்கிற இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடம் மத்திய அரசு தனது கவலையை தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்கள் தூதரக உதவியை நாடுவதற்கான அனுமதியை அமெரிக்கா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக முழுமையான தகவல்களையும், சமீபத்திய நடவடிக்கைகளையும் தெரிவிக்க வேண்டும் எனவும், அவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக அவர்களை இங்கு நாடு கடத்தி விடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளோம் என குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள காவல் மையங்களுக்கு இந்திய தூதரகம் மற்றும் துணைத்தூதரக அதிகாரிகள் நேரில் சென்று, இந்திய மாணவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 30 மாணவர்கள் தொடர்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர். மீதி மாணவர்களை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகிறது.
இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்குகிற தொலைபேசிச்சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.