பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி ரத்து- மத்திய அரசு அறிவிப்பு

டிரம்ப் வரி விதிப்பால் இந்தியாவில் ஜவுளித்துறை ஏற்றுமதி பாதிப்பை சந்தித்து வருகிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷியாவுடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தை காரணம் காட்டி கூடுதலாக 25 சதவீதம் என டிரம்ப், இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார்.
இந்த வரி விதிப்பால் இந்தியாவின் ஜவுளித்துறை ஏற்றுமதி பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனை ஈடு செய்யும் விதமாக இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான 11 சதவீத வரியை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி வரை இந்தியாவில் இறக்குமதி செய்யும் பருத்தி மீதான வரியை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையே ரஷியா- உக்ரைன் போரில் அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் ரஷியாவை காரணம் காட்டி இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






