அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு: தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

ரேவந்த் ரெட்டி தலைமையிலான அதிகாரப்பூர்வ குழு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செல்ல மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது
ரேவந்த் ரெட்டி
Published on

தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 30-ந் தேதி ஐதராபாத் திரும்ப அவர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் அவர் வருகிற 23-ந் தேதியே லண்டனில் இருந்து ஐதராபாத் திரும்புகிறார்.

இங்கிலாந்து செல்ல மட்டுமே அனுமதி

இதுதொடர்பாக தெலங்கானா முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-ரேவந்த் ரெட்டி தலைமையிலான அதிகாரப்பூர்வ குழு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செல்ல மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதில் இங்கிலாந்து செல்வதற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்தது.முதல்-மந்திரி தலைமையிலான குழு இங்கிலாந்து சென்ற பிறகுதான், அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை மத்திய அரசு மறுத்தது. அரசியல் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயணம் ரத்து

இதன் காரணமாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்கும், தெலங்கானாவுக்கும், குறிப்பாக ஐதராபாத்துக்கும் கொண்டு வருவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. இதன் மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து கல்வி மற்றும் பயிற்சியை பெற வேண்டும் என்ற இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காண முடியும்.தேசத்தை கட்டியெழுப்புவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் ஆகிய விஷயங்களில் அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு நாம் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com