

இந்தியாவில் ஒருவர் தனது பெயரில் வைத்திருக்கக்கூடிய மொபைல் இணைப்புகளுக்கு ஏற்கனவே வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விதியைத் தீவிரமாக அமல்படுத்த தொலைத்தொடர்புத் துறை புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒருவர் அதிகபட்சமாக 9 மொபைல் இணைப்புகளை வைத்திருக்கலாம். இந்த எண்ணிக்கையை ஏற்கனவே எட்டியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இனி புதிய சிம் கார்டு வழங்கக்கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக தொலைத்தொடர்புத் துறையின் பாதுகாப்பான மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நுண்ணறிவு தளம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நபரின் பெயரில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை எட்டியுள்ளதா என்பதை இந்த தளம் மூலம் நிறுவனங்கள் சரிபார்க்க முடியும். மேலும், அந்த வரம்பை எட்டிய வாடிக்கையாளர்களின் புகைப்பட விவரங்களும் தளத்தில் கிடைக்கச் செய்யப்படுகின்றன.
வரும் 24-ந் தேதி முதல் இந்த நடைமுறையை செயல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அமைப்பை முழுமையாக ஒருங்கிணைக்கும் பணிகளை நவம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலி சிம் கார்டுகள் மூலம் நடைபெறும் ஆன்லைன் மோசடி, வங்கி மோசடி உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.