

புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 15 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 14 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனப்பாதுகாப்புச்சட்டம், திவால் நிறுவனங்கள் அவசர சட்டம், ஆகியவற்றுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. இதைத்தவிர நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன.
ஜி.எஸ்.டி மசோதா உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த சூழலில் குளிர்கால கூட்டத்தொடரில் எந்தெந்த விஷயங்களை பிரதானமாக விவாதிக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ், அதிமுக, திமுக, சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், உள்பட பல்வேறு கட்சிகளைச்சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர்களிடம் சுமித்ரா மகாஜன் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.