

புதுடெல்லி,
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி மும்பையில் அவருக்கு சொந்தமான ஐ.ஆர்.எப். அமைப்புக்கு (இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ், மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது.
தற்போது மலேசியாவில் உள்ள மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப்-க்கு விதிக்கப்பட்ட தடையை ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த அமைப்பு நவம்பர் 17, 2016 அன்று மத்திய அரசால் முதன்முதலில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 (37 இன் 1967) இன் கீழ் ஒரு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பாதுகாப்புக்கு பாதகமான செயல்களில் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஈடுபட்டு வருவதாகவும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் அதன் உறுப்பினர்கள், குறிப்பாக, நிறுவனர் மற்றும் தலைவர் ஜாகிர் அப்துல் கரீம் நாயக் என்ற ஜாகிர் நாயக், மதம், நல்லிணக்கமின்மை ஆகியவற்றின் அடிப்படையில், அதன் ஆதரவாளர்களை ஊக்குவிக்க முயற்சிக்கிறார் என்று மத்திய அரசு கூறி உள்ளது.