

சண்டிகர்,
பஞ்சாப்பின் சண்டிகர் நகரில் செக்டார் 32 பகுதியில் 25 பேர் தங்க கூடிய வசதி கொண்ட தங்கும் விடுதி ஒன்று அமைந்து உள்ளது.
இதன் முதல் தளத்தில் திடீரென இன்று மாலை தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 2 கல்லூரி மாணவிகள் உள்பட 3 இளம்பெண்கள் உயிருடன் எரிந்து பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காயமடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
ஒரு பெண் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளார். அவருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது. பலியானவர்கள் ரியா, பன்ச்சி மற்றும் முஸ்கான் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அனைவரும் 18 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த சம்பவத்தில் பலியான இளம்பெண்களில் இருவர் பஞ்சாப் மற்றும் ஒருவர் அரியானாவை சேர்ந்தவர்கள். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வாகனங்களும் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. தீ விபத்திற்கான சரியான காரணம் தெரிய வரவில்லை.