நிஜாமாபாத் தொகுதியில் சந்திரசேகர ராவ் மகளை வீழ்த்திய விவசாயிகள்

நிஜாமாபாத் தொகுதியில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் தோல்விக்கு விவசாயிகள் காரணமாக இருந்துள்ளனர்.
நிஜாமாபாத் தொகுதியில் சந்திரசேகர ராவ் மகளை வீழ்த்திய விவசாயிகள்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் நாடாளுமன்ற தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் பா.ஜனதா வேட்பாளர் டி.அரவிந்திடம் தோல்வி அடைந்தார்.

அவரது வீழ்ச்சிக்கு மஞ்சள் விவசாயிகள் காரணமாக இருந்துள்ளனர். மஞ்சள் வாரியம் அமைக்க கவிதா மறுத்து விட்டதால், அந்த தொகுதியில் அவருக்கு எதிராக 177 விவசாயிகள் சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இதனால் வேட்பாளர் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்தது. இது, அப்போதே பரபரப்பு செய்தி ஆனது.

177 விவசாயிகளும் பெற்ற மொத்த ஓட்டுகள் 90 ஆயிரம் ஆகும். ஆனால், கவிதா 70 ஆயிரத்து 875 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். விவசாயிகள் போட்டியிடாமல் இருந்து, அந்த ஓட்டுகள் கவிதாவுக்கு சென்றிருந்தால் அவர் வெற்றி பெற்றிருப்பார். எனவே, அவரது தோல்விக்கு விவசாயிகள் காரணம் ஆகிவிட்டனர்.

இதுகுறித்து சுயேச்சையாக போட்டியிட்ட ரமேஷ் என்ற விவசாயி கூறியதாவது:-

பா.ஜனதா வேட்பாளர் அரவிந்த் மீது எங்களுக்கு தனிப்பாசம் ஏதும் கிடையாது. அவர் மஞ்சள் வாரியம் அமைப்பதாக வாக்குறுதி அளித்தார். காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால், ஒரே மாற்றாக, அரவிந்துக்கு வாக்களித்தோம்.

3 மாதங்கள் காத்திருப்போம். அவர் வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா என்பதை பார்த்து விட்டு, எங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம். எங்களுக்கு பிரசாரம் செய்யும் அளவுக்கு வசதி கிடையாது. எங்கள் பிரச்சினையை விவாதப் பொருளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே களம் இறங்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, நிஜாமாபாத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே ரகசிய உறவு நிலவியதாகவும், இரு கட்சிகளும் சேர்ந்து விவசாயிகளை போட்டியிட வைத்ததாகவும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்த பல்லா ராஜேஷ்வர ரெட்டி குற்றம் சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com