

புதுடெல்லி,
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பிலும், எக்சோஸ்பியர் என்ற வளிமண்டல அடுக்கிலும் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலவு குறித்த ஆய்வுகளில் இது குறிப்பிடத்தகுந்த கண்டுபிடிப்பாக கருத்தப்படுகிறது.
இதற்கு அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் இருந்த ரோவர் என்ற கருவியின் மூலம் நிலவில் தரையிறங்கி, அதன் மேற்பரப்பை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். ஆனால் செப்டம்பர் 7, 2019 அன்று நிலவில் தரையிறங்கிய போது லேண்டர் கருவி நிலவில் மோதியதால், அந்த திட்டம் தோல்வியடைந்தது. இருப்பினும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, தொடர்ந்து நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து வருகிறது.
இதனை தொடர்ந்து விரைவில் சந்திரயான்-3 விண்கலம் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மக்களவையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறைகளின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அவர் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-
சந்திரயான்-3 திட்டத்தை மெய்யாக்குவதில் கட்டமைப்புப் பணியை இறுதி செய்தல், துணை அமைப்புமுறைகளின் நடைமுறையாக்கம், ஒருங்கிணைப்பு, விண்கல அளவில் விரிவான சோதனை மற்றும் பூமியின் மீது அமைப்புமுறை செயல்திறனை மதிப்பிடுவதற்கான சிறப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகள் அடங்கியுள்ளன. இந்தத் திட்டத்திற்கான பணிகள் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்படைந்தது.
எனினும், வீடுகளிலிருந்து செய்யக்கூடிய அனைத்துப் பணிகளும் பொதுமுடக்கத்தின் போதும் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்படத் தொடங்கியது முதல், சந்திரயான்-3 திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இயல்பான பணிகள் இனி மேற்கொள்ளப்படும் என்ற அனுமானத்தில், 2022-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.