

சென்னை,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி விண்ணில் ஏவியது. நிலவில் தரை இறங்குவதில் தோல்வியை தழுவி இருந்தாலும், விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டுகளாக நிலை நிறுத்தப்பட்டு ஆய்வுக்கான படங்கள் மற்றும் தரவுகளை அனுப்பி வருகிறது. இது தற்போது 7 ஆண்டுகள் வரை தரவுகளை அனுப்ப உள்ளது.
இதுகுறித்து இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:-
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் ஆய்வுப்பணிக்காக பொருத்தப்பட்டு இருந்த நவீன கருவிகளான ஆர்பிட்டர் கலன் மற்றும் அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர், சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார், 3-டி கேமராக்கள் உள்பட 8 விதமான ஆய்வு கருவிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஓராண்டில் 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட முறை நிலவை சுற்றி தரவுகளை சேகரித்து உள்ளது. அதில் உள்ள நவீன கருவியான ஆர்பிட்டரின் ஆய்வுக்காலம் ஓராண்டு என்று முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதில் அதிகளவு எரிபொருள் இருப்பதால் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டர் ஆய்வு பணியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.