காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் செல்போனில் 'கேம்' விளையாடிய சத்தீஷ்கார் முதல்-மந்திரி

முதல்-மந்திரி பூபேஷ் பாகல், தனது செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்ததாக ஒரு புகைப்படத்தை பா.ஜனதா வெளியிட்டது.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் செல்போனில் 'கேம்' விளையாடிய சத்தீஷ்கார் முதல்-மந்திரி
Published on

ராய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஷ்கார் மாநிலத்தில் நவம்பர் 7 மற்றும் 17-ந் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவின் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

அதில், மேலிட பொறுப்பாளர் குமாரி செல்ஜா, மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேர்வுக்குழு தலைவர் அஜய் மக்கான், காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

அப்போது, முதல்-மந்திரி பூபேஷ் பாகல், தனது செல்போனில் 'கேன்டி கிரஷ்' விளையாடிக் கொண்டிருந்ததாக ஒரு புகைப்படத்தை பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்டார். ''காங்கிரஸ், ஆட்சியை தக்கவைக்காது என்று தெரிந்ததால், பாகல் பதற்றமின்றி இருக்கிறார்'' என்றும் அவர் கூறியிருந்தார்.

அதற்கு பூபேஷ் பாகல் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

"இதற்கு முன்பு நான் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியதையும் பா.ஜனதா ஆட்சேபித்தது. தற்போது, கூட்டம் தொடங்குவதற்கு முன்பு செல்போனில் 'கேன்டி கிரஷ்' ஆடியதையும் எதிர்க்கிறது. நான் தொடர்ந்து விளையாடுவேன். யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com