

காசியாபாத்,
ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் பிரீடம் 251 என்ற பெயரில் ரூ.251க்கு செல்போன் வழங்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து சுமார் 7 கோடி பேர் இந்த மொபைலுக்காக ஆன்லைனில் பதிவு செய்தனர். இந்த அறிவிப்பு பல முன்னணி செல்போன் நிறுவனங்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதில் சதி இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தநிலையில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மொகித் கோயல் மீது காசியாபாத்தைச் சேர்ந்த அயம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காசியாபாத் போலீசில் புகார் செய்தார். அதில், கடந்த 2015ம் ஆண்டு பிரீடம் 251 செல்போனை வினியோகிப்பதற்காக ரூ.30 லட்சத்தை அந்த நிறுவனத்துக்கு அளித்தேன். ஆனால் அவர்கள் ரூ.14 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே எங்களுக்கு அளித்தனர். மீதி பணத்தை திருப்பி கேட்டபோது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். என்னிடம் ரூ.16 லட்சத்தை மொகித் கோயல் மோசடி செய்துவிட்டார் என கூறப்பட்டு இருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மொகித் கோயலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மோகித் கோயலிடம் விசாரணை நடத்திய போது, அவர் 8 ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதும் அதிலும் அவர் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். லிங்கெடன் இணையதளத்தில் அமிதி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்துள்ளதாக கோயல் குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், விசாரணையின் போது, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும் தனது ஆங்கிலப்புலமையை மேம்படுத்த தனியாக பயிற்சி வகுப்புகள் சென்றதாகவும் மோகித் கோயல் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அமிதி பல்கலகைக்கழகம், மோகித் கோயல் தனது பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்று தெரிவித்துள்ளது. அதேவேளையில், அவர் எந்த பட்டபடிப்பை மெற்கொண்டார் அல்லது தொலைதூரக்கல்வியில் பயின்றாரா? என்பது குறித்த இன்னும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.