

கோழிக்கோடு,
மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது அவரிடம், குடியுரிமை திருத்த சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு முரளிதரன் கூறியதாவது:-
குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துமாறு அவரிடம் யாரும் கேட்கவில்லை. அதை அமல்படுத்துவதில் முதல்-மந்திரிகளுக்கு எந்த பங்கும் கிடையாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதிலும் கேரள அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. அப்படி மறுத்தால், மத்திய அரசின் திட்ட பலன்கள், கேரளாவுக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே, திட்ட பலன்கள் வேண்டுமா என்பதை கேரள அரசு முடிவு செய்து கொள்ளட்டும். இவ்வாறு அவர் கூறினார்.