ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன்பு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய வெளிநாட்டு டாக்டர்கள் உள்பட பலர் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் 2 வழக்குகளை தாக்கல் செய்தது, அதில், விசாரணை ஆணையத்தின் நடவடிக்கைகளினால், எங்கள் ஆஸ்பத்திரிக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

ஏன் என்றால், விசாரணை ஆணையம் தேவையில்லாத விவரங்களை எல்லாம் கேட்கிறது.அரசு டாக்டர்கள் சாட்சியம் அளிக்கும்போது, அவர்களை குறுக்கு விசாரணை செய்ய எங்கள் ஆஸ்பத்திரி தரப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. எனவே, மருத்துவ விவரங்கள் புரிந்துகொள்ள முடியாததால், 21 துறைகளை சேர்ந்த டாக்டர்களை கொண்ட குழுவை அமைக்கும்படி கடந்த டிசம்பர் மாதம் எங்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையையும் ஆணையம் நிராகரித்துவிட்டது. எனவே, இந்த ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தினால், ஆஸ்பத்திரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். அதனால், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 21 துறைகளை சேர்ந்த தன்னிச்சையான டாக் டர்கள் குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை, சிகிச்சை குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கவேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக எங்கள் ஆஸ்பத்திரி தரப்புக்கு விலக்கு அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com