சத்தீஸ்கார்: இரும்பு ஆலையில் வெடி விபத்து- 9 பேர் உடல் கருகி பலி, 14 பேர் படுகாயம்

சத்தீஸ்காரில் இரும்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி பலியாயினர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
சத்தீஸ்கார்: இரும்பு ஆலையில் வெடி விபத்து- 9 பேர் உடல் கருகி பலி, 14 பேர் படுகாயம்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் துர்க் மாவட்டம் பிலாய் நகரில் மாநில அரசுக்கு சொந்தமான இரும்பு ஆலை இயங்கி வருகிறது. நவீனமாயமாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட இந்த ஆலையை கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய ரெயில்வே துறைக்கு உலகத்தரம் வாய்ந்த ரெயில் தண்டவாளங்களை தயாரித்து வழங்கும் பணியை இந்த ஆலை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பிலாய் இரும்பு ஆலையில் நேற்று காலை வழக்கமான உற்பத்தி பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 11 மணி அளவில் சற்றும் எதிர்பாரத வகையில் ஆலையில் உள்ள கியாஸ் குழாயில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஆலைக்குள் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 14 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த 14 பேர்களும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com