

தன்டேவாடா,
சத்தீஷ்காரில் கடந்த வருடம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்து பூபேஷ் பாகேல் முதல் மந்திரியானார். சத்தீஷ்காரில் பல்வேறு இடங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளன. அவர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட சில தொகுதிகளில் நக்சலைட்டுகள் போஸ்டர்களை ஒட்டி ஓட்டுப்பதிவை புறக்கணிக்கும்படி கூறி பொதுமக்களை மிரட்டினர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரது வாகனமும் வெடித்து சிதறியது. உடன் பாதுகாப்பு பணியில் சென்ற வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, தன்டேவாடா நகரில் பொடாலி என்ற கிராமத்தில் புதிய போலீஸ் முகாம் ஒன்று அமைக்கப்பட்டது.
ஆனால் இதனை வரவேற்பதற்கு பதிலாக கிராமத்தினர் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்று அவர்களை அமைதிப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நக்சலைட்டுகள் கொடுத்த அழுத்தத்தினால் கிராமத்தினர் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் முகாம்களை முற்றுகையிட முயன்றனர். இதன்பின்பு கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் அவர்களை கலைத்தனர் என்று தன்டேவாடா எஸ்.பி.யான அபிசேக் பல்லவா கூறியுள்ளார்.