

மும்பை,
மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு நேற்று ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது பெரும் கட்சியாக வந்த சிவசேனா தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தேசியவாத காங்கிரஸ் தரப்பு, முதல்வர் பதவியிலும் பங்கு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனாவுடன் ஒப்பிடும்போது, வெறும் 2 இடங்களைத்தான் தேசியவாத காங்கிரஸ் குறைவாக பெற்றுள்ளது என்பதைக் கணக்கில் கொண்டுதான், முதல்வர் பதவி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் பங்கு கேட்டு தான், பாஜக-வுடன் மோதலில் ஈடுபட்டு, கூட்டணியையும் முறித்தது சிவசேனா. தற்போது அந்தக் கட்சிக்கும் அதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதால் திரிசங்கு நிலையில் சிவசேனா சிக்கியுள்ளது.