

புதுடெல்லி
பிரதமர் மோடி அளித்த இரவு விருந்தில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டு சீன அதிபர் ஜின்பிங் ஓட்டலுக்கு சென்று விட்டார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 11 முதல் 13 வரையிலான 3 நாட்களுக்கு 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜின்பிங் நேற்று டெல்லி வந்தார். பின்னர் பிரிக்ஸ் மாநாட்டு நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இதில் பிரதமர் மோடி கூறுகையில், இருதரப்பு உறவுகளை பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்கள் அடிப்படையில் இரு நாடுகளும் கொண்டு செல்ல வேண்டும். இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு, எல்லைப்பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் இன்றியமையாத அடிப்படையாக திகழ்கிறது என்று கூறினார்.
சீன அதிபர் ஜின்பிங் பேசும்போது. நமது தேசிய சூழல்கள் வேறாக இருந்தாலும், பொதுவான வளர்ச்சி பாதையை தொடரவும், ஒருவருக்கொருவர் முழுமையான ஆதரவாகவும் இருக்க முடியும். சிக்கலான மற்றும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த சர்வதேச சூழல் நிலவும் நிலையில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளாகவும், உலகளாவிய தெற்கின் முக்கிய உறுப்பினர்களாகவும் திகழும் சீனாவும் இந்தியாவும் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை சுமக்கின்றன என்று பேசினார்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது.
ஆனால், இதில் சீன அதிபர் ஜின்பிங் கலந்து கொள்ளவில்லை. அவர் அதனை புறக்கணித்து விட்டார் என கூறப்படுகிறது. அதற்கான காரணம் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், அவர் ஓய்வெடுப்பதற்காக ஓட்டலுக்கு சென்று விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.
இதேபோன்று, அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதுவும் மாநாட்டில் பங்கேற்று விட்டு நாடு திரும்பினார். அவரும் இரவு விருந்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ரஷிய அதிபர் புதின் மற்றும் பிற தலைவர்கள் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.