இந்திய கடல் பகுதியில் நுழைந்த சீன உளவு கப்பல்

சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்கிற உளவு கப்பல் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கடல் பகுதியில் நுழைந்த சீன உளவு கப்பல்
Published on

புதுடெல்லி, 

இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த சீனா முயன்று வருகிறது. சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக பிராந்தியத்தில் உள்ள பிறநாடுகளுடன் இந்தியா தனது ராணுவ உறவுகளை பலப்படுத்தி வருகிறது.

ஆனாலும் சீனா ராணுவ மற்றும் ஆராய்ச்சி கப்பல்கள் அவ்வப்போது இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கடற்படை தளபதி ஹரி குமார் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கப்பல்களின் நடமாட்டம் பெருகி வருவதாகவும், அவற்றை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீனாவின் 'யுவான் வாங்-5' என்கிற உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான 'யுவான் வாங்-5' கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் காணப்பட்டதாகவும், தற்போது அந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துவிட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தியா இன்னும் சில தினங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் அதிநவீன ஏவுகணையை வங்காள விரிகுடாவில் இருந்து ஏவி சோதனை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், சீனாவின் உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் நுழைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன உளவு கப்பல் இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து இந்தியா தரப்பில் ஆதிகாரபூர்வமான எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

அதே போல் சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் வந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திட்டமிடப்படி இந்தியா ஏவுகணை சோதனையை நடத்துமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.

முன்னதாக சீனாவின் இந்த உளவு கப்பல் கடந்த ஆகஸ்டு மாதம் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் ஒரு வார காலம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com