

பெங்களூரு.
கர்நாடக மாநிலம் அஞ்சனாபுரா பகுதியை சேர்ந்த கிரண் (27) மற்றும் பிரேமா (27) ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில், தனது தாயும் சகோதரனும் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, காதலன் கிரணை வீட்டிற்கு வருமாறு பிரேமா அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த கிரணுக்கு “சர்ப்ரைஸ்” கொடுக்கப் போவதாக கூறிய பிரேமா, முதலில் அவரது கண்களை கட்டி, நாற்காலியில் அமர வைத்தார். பின்னர் கயிற்றால் நாற்காலியுடன் அவரை இறுக்கமாக கட்டியுள்ளார். இது குறித்து கிரண் கேள்வி எழுப்பியபோது, மேற்கத்திய பாணியில் காதல் சர்ப்ரைஸ் என கூறியதால் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தார்.
ஆனால், எதிர்பாராத விதமாக பிரேமா முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை கிரண் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீயில் எரிந்த கிரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரேமாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களாக கிரண் தன்னிடம் பேசுவதையும் சந்திப்பதையும் தவிர்த்து வந்ததாகவும், இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பிரேமா தெரிவித்துள்ளார்.
மேலும், கிரண் தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்ற சந்தேகம் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் இக்கொடூர செயலில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.