

புதுடெல்லி,
கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடந்த இந்த ஆலோசனையில், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ் -2 பொது தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பே முக்கியம்.
அதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களின் பதற்றத்துக்கு முற்றுப்பள்ளி வைக்கப்பட வேண்டும். பதற்றமான இந்தச் சூழலில் மாணவர்களைத் தேர்வெழுத நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் உரிய முறைப்படி குறிப்பிட்ட காலத்திற்குள் அளிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.