

பெங்களூரு
கர்நாடகாவில் மழை பற்றாக்குறையை முன்னிட்டு அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு விகிதம் சரிந்துள்ளது. இந்த சூழலில், முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், இன்று காணொலி காட்சி வழியே அதிகாரிகளுடனான கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், பஞ்சாயத்து துணை ஆணையாளர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது அவர், மாநிலம் முழுவதும் வறட்சி ஏற்படுவதற்கான சூழலை முன்னிட்டு அதனை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.
கூட்டத்தில் அவர், வறட்சியை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் சரியான தருணத்தில் அமல்படுத்தப்படுகின்றன என அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். உங்களுடைய அலட்சியத்தினால் எந்தவொரு விவசாயியும் பாதிக்கப்பட கூடாது என்றார்.
இது முக்கியதொரு கூட்டம். மழை பற்றாக்குறையால் வருகிற நாட்களில், ஏற்பட கூடிய எந்தவித நெருக்கடியையும் சரிசெய்ய அரசு நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
விவசாயிகளை பாதுகாப்பது மற்றும் குடிநீர் உறுதி செய்யப்பட வேண்டியது அரசின் முக்கிய முன்னுரிமையாக கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கர்நாடகாவில் 68 சதவீத மழை பற்றாக்குறையால், 88 தாலுகாக்களில் நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டருக்கும் கீழ் குறைந்துள்ளது என துணை முதல்-மந்திரி பரமேஷ்வரா கூறியுள்ளார். நிலைமை மோசமடைய கூடிய வகையில் அணைகளில் நீர்மட்ட அளவும் விரைவாக சரிந்து வருகிறது.
இந்த சூழலில், 178 தாலுகாக்களில் மழை பற்றாக்குறை பதிவாகி உள்ளது என கூறிய முதல்-மந்திரி, மழைப்பொழிவு அடிப்படையில் விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தவும், விவசாயிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.