கர்நாடகத்திற்கு ரூ.6,673 கோடி ஒதுக்க வேண்டும் - பிரதமரிடம், முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்தல்

நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.6,673 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், முதல்-மந்திரி எடியூரப்பா வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின் 6-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர். காணொலி காட்சி மூலமாக நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூருவில் இருந்தபடி முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டார்.

அப்போது காநாடகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் முதல்-மந்திரி எடியூரப்பா விவரித்தார். குறிப்பாக பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் 3,409 மருத்துவமனைகள் சேர்ந்திருப்பதாகவும், நாட்டிலேயே கர்நாடகத்தில் தான் இந்தளவுக்கு அந்த திட்டத்தில் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்திருப்பதாகவும் எடியூரப்பா தெரிவித்தார்.

மேலும் சேவா சிந்து திட்டத்தின் கீழ் 750 சேவைகள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடல் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ள 41 தாலுகாக்களில், புதிய நீர்ப்பாசன திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சிக்காக 2020-2025-ம் ஆண்டுக்காக புதிய தொழில் கொள்கை அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.

இந்த நிலையில், பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்தும் முக்கியமாக 5 கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-மந்திரி எடியூரப்பா வைத்திருந்தார்.

அதன்படி, கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றவும், மாநிலத்தில் கால்வாய் அமைத்தல், கால்வாய்களை தூர்வார்தல் உள்ளிட்ட பணிகளுக்காக மத்திய அரசு ரூ.6,673 கோடி நிதி ஒதுக்க வேண்டும். தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக கர்நாடகத்திற்கு ஒதுக்க வேண்டும். பத்ரா மேல்அணை மற்றும் கிருஷ்ணா மேல்அணை திட்டத்தை தேசிய திட்டமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

நீர்ப்பாசன திட்டங்களில் மாநிலங்களுக்கு இடையே இருக்கும் சட்டபிரச்சினைகளுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடைப்பட்டு இருக்கும் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதற்கும் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்காக, கர்நாடகத்திற்கு வரவேண்டிய உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும். மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.4,300 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com