மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன் - மம்தா பானர்ஜி

மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன் - மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா,

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா பரவி வரும் சூழலில், நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கத்தக்கதல்ல.

பல்கலைக் கழகத்தில் உள்ள கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகளை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய மாநில கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ஆன்லைன் தேர்வுகளையும் வரும் ஆயுத பூஜைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் எந்தவொரு தேர்வுமுறைக்கும் எதிரானவர்கள் அல்ல. கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காதீர்கள் என்றுதான் கூறுகிறோம்.

பல்கலைக்கழக இறுதி பருவ தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், அதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து யூஜிசியிடம் முறையிடலாம் என தெரிவித்துள்ளது.

ஆனால் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்தியே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தில் மத்திய அரசு உள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 16-ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் விவசாயிகளும் வயலில் இறங்கி ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் நானும் சில இடங்களில் பங்கேற்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com