நாட்டில் 45 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: முந்தைய ஆண்டைவிட 18 சதவீதம் அதிகம் - அமைச்சகம் தகவல்

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 45 கோடி டன் அளவை எட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 18 சதவீதம் அதிகம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி 44.8 கோடி டன் அளவை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் உற்பத்தியைவிட 18 சதவீதம் அதிகம் ஆகும். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும் 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மத்திய நிலக்கரி அமைச்சகம் 3 கோடி டன் அளவு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க திட்டமிட்டு உள்ளது. 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனல் மின் நிலையங்களில் 4.5 கோடி டன் நிலக்கரியை கையிருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நிலக்கரியை ஏற்றிச் செல்வதில் 9 சதவீத வளர்ச்சி இருந்தது. இது மின் உற்பத்தி நிலையங்களின் கையிருப்பை அதிகரிக்க உதவியது.

இந்த தகவல்களை நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com