

பத்தனம்திட்டா,
சபரிமலை அய்யப்பன் கோவில் பகுதி மாநில அரசால் 'சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மேலே இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்துள்ளது. சந்நிதானத்தை சுற்றி நான்கு முறை ஹெலிகாப்டர் சுற்றி உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும் கோவிலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இதுகுறித்து விசாரணை நடத்த சபரிமலை சிறப்பு ஆணையர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பம்பை போலீசார் 118(இ) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் பறந்த விவகாரம் குறித்து கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
"கொச்சியிலிருந்து வழக்கமான பயிற்சியில் இருந்த ஹெலிகாப்டர் சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. மதியம் 1:15 மணியளவில், மேக கூட்டங்கள் மற்றும் மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் அதன் பாதையிலிருந்து விலகி பம்பை மலைகளுக்கு மேல் பறக்க நேரிட்டது. வானிலை சீரானவுடன் ஹெலிகாப்டர் பத்திரமாக கொச்சி தளத்திற்குத் திரும்பியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து ஏடிஜிபி தலைமையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.