கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை அடுத்து டெல்லியில் காவல்துறை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றம் நோக்கி நாளை (20-ஆம் தேதி) அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)அறிவித்துள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோத ஒரே நாடு ஒரே தேர்தல், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இந்நிலையில், டெல்லியில் இன்று காலை பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில், மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் ஜெயராம் ரமேஷ், திமுகவின் திருச்சி சிவா, அதிமுகவின் தம்பித்துரை உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா கூட்டணி வெளிநடப்பு

திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்பிக்கள் பங்கேற்றதால், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.

கூட்டத்தில் மசோதா மீது எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விவாதங்களை முன் வைக்கவும், சுமூகமாக மழைக்கால கூட்டத்தொடரை நடத்த ஒத்துழைப்பு வழங்கவும் மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரம், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பவும், 'இந்தியா' கூட்டணி திட்டமிட்டுள்ளது. இதனால் மழைக்கால கூட்டத்தொடரில் அமளிக்கு பஞ்சமிருக்காது.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணி

இந்தநிலையில், நாடாளுமன்றம் நோக்கி வரும் ஜூலை 20-ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்த உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி)அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதை அடுத்து பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை அடுத்து டெல்லியில் காவல்துறை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com