‘மழைநீரை சேகரியுங்கள்’ - பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மழைநீரை சேகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
‘மழைநீரை சேகரியுங்கள்’ - பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டில் பருவமழை தொடங்கிவிட்டது. இறைவன் நமது நாட்டுக்கு போதுமான மழையை கொடுத்திருப்பது நமது அதிர்ஷ்டம். ஆனால் இயற்கை கொடுத்த இந்த கொடைக்கு மரியாதை அளிப்பது நமது கடமை. பருவமழை தொடங்கிவிட்டதால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, முடிந்த அளவுக்கு மழைநீரை சேகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தடுப்பணைகள் கட்டுவது, ஆறுகள், நீரோடைகளின் கரைகளை பலப்படுத்துவது, அணைகளின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் தூர்வாருதல் ஆகிய பணிகளில் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்வதன்மூலம் பயிர் சாகுபடி அதிகரிப்பது மட்டுமின்றி, நாம் அதிக அளவு தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். இதனை பல காரணங்களுக்காக பயன்படுத்த முடியும். பஞ்சாயத்து தலைவர்கள் மக்கள் கூட்டத்தை கூட்டி, எனது இந்த கடிதத்தை படித்து காட்ட வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டத்தை நீங்கள் மாபெரும் இயக்கமாக நடத்தியதுடன், மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி கண்டீர்கள். அதேபோல இந்த தண்ணீர் சேமிப்பு இயக்கத்தையும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி வெற்றி காண வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். புதிய இந்தியாவை உருவாக்குவதில் முடியாததையும் முடித்துக் காட்டும் வகையில் உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com