வாட்ஸ் அப் குரூப்பில் கிண்டல் செய்ததால் விரக்தி; கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

அருணின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் மாதநாயகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இதனிடையே, கடந்த 11ம் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த அருண், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மகனின் செல்போனை அருணின் பெற்றோர் ஆய்வு செய்தனர். அப்போது, கல்லூரி வாட்ஸ் அப் குரூப்பில் அருணை அவரது வகுப்பில் படித்து வந்த 3 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தது தெரியவந்தது.
இது குறித்து அருணின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அருணின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கல்லூரி வகுப்பு வாட்ஸ் அப் குரூப்பில் அருணை அவரது வகுப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தது உறுதியானது. மாணவர்களின் கிண்டலால் விரக்தியடைந்த அருண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, அருணை தற்கொலைக்கு தூண்டியதாக 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






