

திருப்பதி,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சைதன்யா (வயது 21). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு அருகே உள்ள கூல் டிரிங்ஸ் கடைக்கு சென்ற சைதன்யா கடை உரிமையாளரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் பிரிட்ஜில் உள்ளது எடுத்து கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார். இதையடுத்து சைதன்யா பிரிட்ஜில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார்.
அப்போது தண்ணீர் பாட்டிலுக்கு பதிலாக ஆசிட் ஊற்றி வைத்து இருந்ததை எடுத்து குடித்தது தெரியவந்தது. இதனால் சைதன்யாவின் வாய் மற்றும் குடல் முழுவதும் வெந்தது. இதனால் சைதன்யா வலியால் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் சைதன்யாவை மீட்டு விஜயவாடாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கூல் டிரிங்ஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில் தண்ணீர் பாட்டில் அருகில் ஆசிட் ஊற்றி வைத்திருந்ததை தெரியாமல் சைதன்யா குடித்தது தெரியவந்தது.
சைதன்யா ஆசிட் குடித்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பரவியது. இதையடுத்து மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூல் டிரிங்ஸ் கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.