

மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 3.60 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜார்கிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காட்டு யானை நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டு யானை நுழைந்ததால், வரிசையில் காத்திருந்த மக்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் யானையை விரட்டியடித்த பிற்கு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.