

புதுடெல்லி,
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவது தொடர்பாக வழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல் மற்றும் ரீபாக் கன்சல் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மே மாதம் பொதுநல மனு ஒன்றை தக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு தொடர்பான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை முடிவு செய்வது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பேரிடர் மேலாண்மை ஆணையமே முடிவெடுக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ் முறையை எளிமையாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.