கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்

தாயின் கொடுமையை தாங்க முடியாமல் 9 வயது மகள் போலீசில் புகார் அளித்தார்.
கண்ணை மறைத்த கள்ளக்காதல் மோகம்: பெற்ற மகள் மீது வெந்நீர் ஊற்றிய கொடூர தாய்
Published on

கலபுரகி,

பெங்களூரு மாநிலம் கலபுரகி டவுன் பிரம்மபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள். சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமியின் தாய், அங்குள்ள விடுதியில் வார்டன் வேலை செய்து வந்துள்ளார்.

இதற்கிடையே விடுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருடன் சிறுமியின் தாய்க்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அந்த பெண் தனது வீட்டில் வைத்து அரசு ஊழியருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றி அறிந்த தனது மகளை, அவரது தாய் மிரட்டி வந்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் வெந்நீரை மகள் மீது ஊற்றி கொடுமைப்படுத்தி உள்ளார். இதில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாயின் கொடுமையை தாங்க முடியாமல் 9 வயது சிறுமி, பிரம்மபுரா போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தாள். அப்போது தனது தாய், மற்றொரு நபருடன் உல்லாசமாக இருப்பதாகவும், அதுபற்றி வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டியதுடன், வெந்நீரை தன் மீது ஊற்றியதாகவும் கூறினாள். இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல் பற்றி அறிந்ததால் பெற்ற மகள் மீது தாய் வெந்நீர் ஊற்றிய கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com